Thursday, September 2, 2021

வண்ணத்துப்பூச்சியும்... 'அக்ரோன்' அழகிகளும்


மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்

மழை ஓய்ந்து.... பனி போர்த்தியிருந்ததோர் மாலைப்பொழுது.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக, புல்வெளியும் மலர்ச்செடிகளும் சூழ அமையப்பெற்றிருந்த வீட்டில்...

கிறுக்கப்பட்ட கவிதையாகக் கலைந்து கிடந்தது; அந்த ஓவியனின் தனியறை.

அணைக்க மறுந்த, சிம்னியை ஒத்ததோர் சிறு விளக்கின் ஒளித்துகள்கள் அறையெங்கும் சிதறிக் கிடந்தன.

துடைத்துத் தூசகற்றி...மேலுமோர் புதிய ஓவியத்தைப் பிரசவிப்பதற்குத் தயார்படுத்தப்பட்டிருந்த அகன்ற மேசையின் கண்ணாடி 'முற்றம்' மட்டும் பளிச்சென்றிருந்தது.

நடுமத்திக் கண்ணாடி முற்றத்தில்...விரித்து வைக்கப்பட்டிருந்த வெள்ளைத்தாள், முதலிரவு அறையில் கசங்காத, கறைபடாத புதிய விரிப்பைப்போல அப்படியேயிருக்க,

அதன் பக்கத்தே... தலைக்குக் குளித்து தளர்ந்தயர்ந்திருந்தது:
கறுகறு முடியோடு கறுப்புக் கட்டழகனாக மிளிர்ந்த தூரிகை.

அதற்குச் சற்றுக் கீழே...

'கண்ணாடி முற்ற'த்தின் வலது கோடியில்,

வரிசையாக உட்கார்ந்திருந்தன மஞ்சச் செவப்பு, காந்தக் கறுப்பழகிகள் அடங்கலான...இன்னும் கன்னி கழியாத, சில 'கலர்'புல் தேவதைகள்.

மாரில் திரண்டு...கழுத்து வழி பிதுங்கக் காத்திருந்த அந்த இருபத்திநான்கு புட்டிகளும், இளமையையும் அழகையும் தம் தேகம் முழுக்கவும் இன்னும் மிச்சம் வைத்திருந்த 'அக்ரோன்' அழகிகளாகத் தெரிந்தார்கள்.

பக்கத்தே... பன்னீர் மணத்தோடு வெண்புனலால் நிரம்பியிருந்தது கண்ணாடித் தம்ளர்.

அறை முழுக்கவும் அமைதி ஆர்மோனியம் வாசித்துக்கொண்டிருந்தது.

சட்டென்று... உதிர்ந்த வானவில்லாட்டம் அந்த ஓவியக் கூடத்தின் மொசைக் தரையில், எங்கிருந்தோ வந்து வீழ்ந்தது ஒரு வண்ணத்துப்பூச்சி.

அடுத்த சில கணப்பொழுதில்... சுதாகரித்தெழுந்து, அறை முழுக்கவும் இரு சுற்றுப்பறந்த அந்த பொன்னிறப் புஷ்பம்... வெண்புனல் ரொம்பிய கண்ணாடித் தம்ளரின் விளிம்பில் போய் அமர்ந்துகொண்டது.

நீர் அதிர்ந்தது. ஆயினும் அமைதியாக இருந்தது.

அடுத்த சில நொடி இடைவெளியில் கொஞ்சம் இளைப்பாறிக்கொண்ட அந்த வண்ணத்துப்பூச்சி...தெளிந்து ஒளிர்ந்த நீரைப் பார்த்து அன்பொழுகக் கேட்டது.

"உன்னைக் கொஞ்சம் அருந்திக் கொள்ளட்டுமா?"

நீர் மீண்டும் அதிர்ந்தது. அதற்கு வியர்த்திருக்கவும் கூடும்.

சீற்றத்தோடு பார்த்த பின் பதிலளித்தது "வேணாம்...என்னை நுகர்ந்து விடாதே..."

"தாகமாக இருக்கிறது... போதாக்குறைக்கு தளர்ந்திருக்கின்றேன்... கொஞ்சம் இடம் கொடேன்... ஒரு துளி உன்னை அருந்திக் கொள்வதற்கு..." கெஞ்சியது வண்ணத்துப்பூச்சி.

நீரோ பிடிவாதமாக மறுத்துக்கொண்டிருந்தது.

"என் தாகமும் தவிப்பும் உனக்குப் புரியவில்லையா? அப்படியென்ன இரக்கமற்ற மனசுனக்கு?" என்றது வண்ணத்துப்பூச்சி.

நீர் மீண்டும் அமைதியானது.

" உன் அனுமதி அவசியமற்றது... ஆயினும் உன்னில் பலவந்தம் பிரயோகிக்க நான் விரும்பவில்லை..." என்ற வண்ணத்துப்பூச்சி, " எனது தவிப்பை மீறிய உனது பிடிவாதம் அர்த்தமற்றது"

"அப்படியல்ல.... உனது தவிப்பை விடவும்... எனது தவம் பெரிது..." என்று சீறியது நீர்.

"அப்படியென்ன தவம்?" கேட்டது வண்ணத்துப்பூச்சி.

" பக்கத்தே சோர்ந்து அமர்ந்திருக்கும் வர்ணக் குமரிகளைப் பார்த்தாயா? அவர்களின் உணர்ச்சிகள், ஏக்கங்களை உன்னால் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது." என்றது நீர்.

வண்ணத்துப்பூச்சி அமைதியாக... கேட்டுக்கொண்டேயிருந்தது.

" உனது தாகத்தை விஞ்சிய தவிப்பு அது. அவர்கள் கன்னிகழியக் காத்திருக்கிறார்கள். கன்னி கழிந்தவுடன் அவர்கள் என்னில் குளிப்பார்கள். அவர்களின் மாறுபட்ட, வேறுபட்ட வர்ணங்கள் என்னில் கரைவதனை நான் தவமாக நினைக்கிறேன். இத்தனை காலம் இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது."

" சரி... அவர்கள் எப்போது உன்னில் கரைவார்கள்....?"

" அவர்கள் எப்போதும் என்னை இப்படிக் காக்க வைத்ததில்லை. இரண்டு நாட்களாகக் காத்திருக்கின்றேன். இம்முறை ஏனோ தவிக்க வைத்து விட்டார்கள்."

"ஏன்... என்னாச்சு?"

"அதனை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்..."

வண்ணத்துப்பூச்சி தம்ளர் விளிம்பிலிருந்து இறங்கிப் பறந்து, அந்த வர்ண தேவதைகள் அருகில் போய் உட்கார்ந்துகொண்டது.

சிவப்பழகிக்கு வெட்கம்.
அது தலையைத் திருப்பிக்கொண்டது.

அடுத்த அக்ரோன் அழகிகள் அமைதியாக இருக்க,

கறுப்பழகி மட்டும் "ஏன்" எனக் கேட்டது.

" நீர் வெள்ளந்தியாகக் காத்திருக்கிறது... ஏனின்னும் பிதுங்கிக் கரையாமலும் நனையாமலும் இருக்கிறீர்கள்?" கேட்டது வண்ணத்துப்பூச்சி.

" அதனை, எம்மை கசங்கிப்பிழிந்து ஆலாபனை செய்யும் தூரிகையைத்தான் கேட்க வேண்டும். மனசற்று இல்லை உடல் நலமற்று அது அங்கே படுத்திருக்கிறது பார்.....அது இப்படிச் சோர்ந்து படுத்து நாம் எப்போதும் பார்த்ததில்லை." என்றது ஊதா நிறத்துத் தேவதை.

வண்ணத்துப்பூச்சிக்கு சிலகணம் பேச்சு வரவில்லை. நாவரண்டது. அதனையும் மீறிய கவலையில் தன்னில் திராணியற்றுப் போவதை அது உணர்ந்தது.

பின் சுதாகரித்துப் பறந்து சென்று.... தூரிகையின் தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டது.

அன்பொழுகக் கேட்டது "உடல் அயர்ச்சியா?"

தூரிகை அதன்பாட்டுக்கு அமைதியாக இருந்தது.

"பாவம்... வர்ண தேவதைகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. காதல் வயப்பட்டவர்களுக்காகக் காத்திருப்பது என்பது கொடூரமான தண்டனை..." என்ற வண்ணத்துப்பூச்சி
" ஏன் மவுனமாக இருக்கிறீர்கள்... தங்கள் வெறுப்புக்கும்... ஓரவஞ்சனைக்கும் என்ன காரணம்?" என கொஞ்சம் உரிமையோடு கேட்டது.

அந்த கருந்தூரிகைக்கு வண்ணத்துப்பூச்சியின் அன்பும் அருகாமையும் பிடித்திருந்ததோ என்னமோ...

தூரிகை சுரத்தேயில்லாமல் மென்மையாகப் பதிலளித்தது

"என்னைக் காதல் ததும்ப ஆட்டுவிக்கும்... தாலாட்டி இயக்கும் வசீகரமும், வரமும் பெற்ற விரல்களைக் காணவில்லை. ரெண்டு நாளாச்சு....மனசு வலிக்கிறது."

" ஏன்... என்னாச்சு?" அதிர்ந்து போய்க் கேட்டது வண்ணத்துப்பூச்சி.

" ஏதாே... கொரோனா பாஸிட்டிவ்வாம்... சில மனிதர்கள் வந்து எனது 'பிரம்மா'வை எங்கேயோ அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதுவரை அவர் இந்த ஓவியக்கூடத்திற்கு வந்து சேரவில்லை. காத்திருக்கிறேன்.
காதல் வயப்பட்டவருக்காகக் காத்திருப்பது... மிக மிகக் கொடூரமான தண்டனைதான்."

தூரிகையின் குரல் தழுதழுக்க, மென்மேலும் மேலும் மேலுமென அதிர்ந்துபோன வண்ணத்துப்பூச்சி,

அடுத்த கணம் அங்கிருந்து எகிறிப் பறந்தது. தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்வதற்காக!

.... யாவும் கற்பனை.
#ரிஸ்கிஷெரீப்

31.05.2021
#ரிஸ்கிஷெரீப் #தமிழ்சிறுகதைகள்
#COVID19 #Acron / Water Colour Tub

Friday, October 30, 2009

கொலை கொலையாம் காரணமாம்...


நீங்கள் இந்தக் கதையைப் படிக்கும் நேரம்...

இந்தப் பரந்த உலகில் இக்கணம் நான் மட்டுமே மட்டும் மிக மிக மிகச் சந்தோசமாக இருப்பதாக உணர்கின்றேன்.

அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து இன்று காலையில்தான் எனக்கும் அருந்ததிக்கும் திருமணம் நடந்தது என்று சொன்னால் நீங்கள் நம்பப் போவதில்லைதான். என்றாலும் ஆயிற்று.

இந்தக் கணம்,

இதமான குளிரில்...

அலங்கரிக்கப்பட்ட முதலிரவு அறையில்...

நான் என் புது மனைவி அருந்ததிக்காகக் காத்திருக்கின்றேன்.

பால் தம்ளர் ஏந்தியவளாக, தலையில் பூ மகுடம் சூடி சினிமாக் க்தாநாயகியாய் அன்ன நடை நடந்து என்னவள் வருவாள் என்கிற கலர் கலரான கனவுகளோடு....காத்திருக்கின்றேன்.

என்னவள் வந்துவிட்ட பிறகு ' என்னைப்பற்றி ' உங்களிடம் சொல்வதற்கு எங்கே நேரம் இருக்கப் போகிறது...ஆக, இப்போதே சொல்லிவிடுவது உசிதம்.

நான் ஒரு அனாதை.

என் பிறப்பு ஒரு குப்பைத் தொட்டிச் சமாச்சாரம்.

' அப்பா யாரு அம்மா யாரு நானும் பார்க்கல...
கண்ணீரைத்தான் கண்டேனம்மா தாய்ப்பால் பார்க்கல..'

- என்கிற புதிய பாதை பார்த்தீபன் மாதிரியான வாழ்க்கைப் பின்னணி எனக்கு.

இன்றைய திகதிக்கு, இருபத்தியெட்டு வயதில் உயரமாய், திடகாத்திரமாய், முகத்தில் தாடைக்குக் கொஞ்சம் மேலாக சின்னதாயொரு வெட்டுக்காயத் தழும்போடு, மாநிறமாய்...கொ..ஞ்..ச..ம் அழகனாய் இருக்கும் என் பெயர் நவநீதகிருஷ்ணன். பிரியமானவர்கள் ' நவா ' என்று அழைப்பார்கள்.

எப்போதுமே சாதி,மதம்,குலம்,கோத்திரம் பார்க்காத நான் இந்திரஜித்,அமீர்டீன்,கிறிஸ்டோபர்,சிறிசேன என்கிற தற்காலிகப் பெயர்களிலெல்லாம் என் தொழில் நிமித்தம் இயங்கி வந்ததுண்டு.

அப்படி நான் என்னதான் தொழில் செய்கின்றேன் என்று ஆச்சரியமாகக் கேட்காதீர்கள். கேட்டால் கொலை விழும் ஜாக்கிறதை. ஜோக்கில்லம்மா...பீ சீரியஸ்.

யெஸ்...நானொரு கான்ட்ராக்ட் கில்லர். - தமிழ்ப்படுத்தினால் ' வாடகைக் கொலையாளி ' என்று அர்த்தம். ஒரு சின்னத் திருத்தம்...நேற்றைவரைக்கும்.

பணத்துக்காக நிறையவும் கொலைகள் செய்திருக்கின்றேன். த்தூ என்று காறி உமிழ்ந்தாலும் உண்மை அதுதான்.

பணத்தின் மீது இருந்த வெறி என்னை வெகு லாவகமாகக் கொலைகள் செய்யும் அளவுக்கு உசுப்பேற்றி வளர்த்து விட்டிருக்கிறது.

எந்தளவுக்கு என்றால்...

ஒரு லட்சம் ரூபாவுக்காக தாசில்தாரைப் போட்டுத் தள்ளச் சொன்ன மில் ஓனரை, தாசில்தாரின் இரண்டு லட்சம் ரூபாவுக்காக வெட்டிச் சாய்த்த அளவுக்கு நீதி நியாயம் பார்க்காத டபிள் க்ராஸிங் பணவெறியன். அதிலும் ஒரு சின்னத் திருத்தம்... நேற்றைவரைக்கும்.

தவிர,நிறையவும் சிகரட் புகைப்பேன்...நிறையவும் பீர் அருந்துவேன்...சில வேளைகளில்...பிடிக்காத கறுப்பிருட்டுக்குள் பிடித்த செந்நிறப் பெண்களோடு நிறையவும் தப்புத் தண்டா பண்ணுவேன். - எல்லாம் நேற்றைவரைக்கும்தான்.

இப்படி நேற்றைவரைக்கும்...

புயல்களுக்குள்ளேயே அடிபட்டுச் சுழன்று, இரசாயனக் கலவைக்குள் அமிழ்ந்து மூச்சுத் திணறிக் கொண்டிருந்த என் வாழ்க்கையில் தென்றலாய்...அமிர்தமாய் வந்தவள் அருந்ததி. கேடுகெட்ட என் வாழ்க்கையைச் சுட்டுப் பொசுக்கிய தீ..அருந்ததீ.

---------  --------  --------  --------  ---------  --------  ---------

` ங்கேயோ... எப்போதோ சடுதியாக நிகழ்ந்த முதல் சந்திப்பிலேயே  காதலாய் என்னைக் கசிந்துருகச் செய்தவள் அருந்ததி.அவளும் என்னைக் காதலிப்பதாகச் சொன்ன இனிப்பான வார்த்தையில் நான் எப்போதுமில்லாதவாறு ஒரு குளிர்ச்சியை உணர்ந்திருக்கின்றேன்.பண வெறியும் கொலைத்தாகமும் என்றிருந்த என் மனக் குரூரத்தை நேரெதிர்த் திசைக்கு இட்டுச் சென்று வாழ்க்கையின் யதார்த்தங்களையும் சுகங்களையும் கற்றுத் தந்தவள்.

கடற்கரையோரமாக ஒருநாள்,

காதலை நாமிருவரும் ஒருசேரக் காதலித்துக் கொண்டிருந்ததொரு சுகமான தறுணம்...அருந்ததி கேட்டாள்.

" நவா... இவ்ளோ காலமும் கொலை கிலைனு நிறையவும் தப்புப் பண்ணி ...அளவுக்கு அதிகமாகவே பணம் சேர்த்துட்டே...இப்போதாவது பழசையெல்லாம் விட்டுட்டு ஒரு புது மனுசனா...நியாயமா ஏதாவது தொழில் செஞ்சு வாழலாமே..."

நான் நிமிர்ந்து பார்க்க,அவளாகவே தொடர்ந்தாள்.

" எப்போதாவது நீ ஜெயிலுக்குப் போறதொரு நிலைமை உருவாயிடுச்சுன்னா...இல்ல உன்னை யாராவது விரோதிங்க போட்டுத் தள்ளினா என்னோட கதி...நிர்க்கதிதானே...யோசிச்சுப்பாரு...நீ எனக்கு வேணும் நவா...காலம் காலத்திற்கும் வேணும்..."என்றவள் என் நெஞ்சில் முகம் புதைத்து அழத்துவங்க,

அவளது வார்த்தைகளில் இழையோடிய ஏக்கம் என்னை நிரம்பவும் யோசிக்க வைத்தது. யோசித்தேன்.

நிழலான - தப்பான தொழிலை விட்டுவிட்டுப் புது மனிதனாக வாழ வேண்டிய தேவையை உணர்ந்து...முதன் முதலாக அன்றுதான் மனமுருகிக் கடவுளிடம் ப்ரார்த்தித்துக் கொண்டேன்.

அதன் பிறகுதான், நாமிருவரும் கல்யாணம் பண்ணிக் கொள்வதாகவும் ஒருசேர முடிவெடுத்தோம்.

பாலையாய்ப்போன என் வாழ்க்கையை ஒரு பெண் பசுஞ்சோலையாய் மாற்றுவாள் என நான் எதிர்பார்த்திருந்தேனா என்ன ? கேள்விக்குறியாக மட்டுமே நீண்டிருந்த என் வாழ்க்கைக்கு புது அர்த்தம் கற்றுத் தந்தவள் அருந்ததிதான். சிறப்பான ஒரு எதிர்காலத்தைக் காட்டி அதற்கு அத்திவாரமும் போட்டவள். நான் அனாதையில்லை என்கிற உணர்வை எனக்குள் ஊடுருவச் செய்து...என்னை சந்தோசத்தில் அழச் செய்தவள்.காதலியாக,மனைவியாக,ஒரு தாயாக...ஏன் ...எனக்கு தெய்வமாக ஆகிப்போனவள் என் அருந்ததி.

அப்படிப்பட்ட அருந்ததியை இன்றைய சுபமுகூர்த்தக் காலை வேளையில் நான் மிக்க சந்தோசமாகத்தான் திருமணம் செய்து கொண்டேன்.

இப்போது - இந்த நிமிடம், முதலிரவு அறையில் முத்துக் குளிப்பதற்காய் என் அருந்ததிக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றேன். ஒரு விபரீதம் எனக்காகக் காத்திருப்பதை அறியாமல்...

----------  -----------   -----------  -----------  -----------

ருந்ததி,கதவைத் தாழிட்டுவிட்டுப் பால் தம்ளரோடு  பவ்யமாய் - அடக்கமாய் - நாணமாய் - வெட்கமாய் என் அருகில் வந்து அமர்ந்துகொள்ள, அவளை ஆரத்தழுவ வேண்டும் என்கிற உத்வேகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

" த்தாங்க... பால் சாப்பிடுங்க..."

பால் தம்ளரை நீட்டிய அவளது கரங்களில் சின்னதாயொரு சில்மிசம் செய்து...வாங்கிக்கொண்டேன்.

" நீ பால் சாப்பிடல்லையா..." -கேட்டேன்.

" எனக்குப் பசும்பால் ஜீரணிக்காதுங்க..."

' எனக்கு பாலில்ல...கல்லோ - கள்ளோ எது சாப்பிட்டாலும் ஜீரணிக்கும் '

அவள் என்னைத் தாபத்தோடு பார்த்துக் கொண்டிருக்க,பால் முழுவதையும் ஒரே மூச்சில் அருந்தினேன்.

அடுத்த சில கணங்கள்...

ஏதோ மயக்கம்...நெஞ்சு அடைக்கிற மாதிரி...

நான் சற்றும் எதிர்பாராத நிலையில், கண்களில் தீப்பொறி பறக்க...அருந்த தீயாக விகாரமாகச் சிரிக்க ஆரம்பித்தாள் அருந்ததி.

நான் நா உலர்ந்து போகத் தடுமாறினேன் " அ..ருந்...த...தி...."

- உலகமே தலை கீழாகச் சுழல்கின்ற பிரமையிலும், சட்டென்று அவள் விழிகளிலிருந்து பொலபொலவெனக் கண்ணீர் திரள்வதை அவதானித்தேன். விரல்நொடிக்கும் பொழுதில் பத்ரகாளி மாதிரியாகி கதறத் தொடங்கினாள் அருந்ததி...

" கொலைகாரப் பாவி...உனக்குக் கல்யாணம் ஒரு கேடா...அடுத்தவங்களோட புதைகுழி மேல உனக்கோர் சந்தோசமான வாழ்க்கையும் முதலிரவும் கேட்குதா ராஸ்கல்...நீ இப்போ சாப்பிட்டது பாலில்லடா...விஷம். பயங்கரமான விஷம்...அதுவும் உன் பணத்திலேயே வாங்கினது. ..."

- நான் திக்கென்று அதிர்ந்து....

"உன் உயிர் என் கையால - என் முன்னாடியே அடங்கிறதைப் பார்க்கத்தாண்டா இத்தனை காலமும் காத்திருந்தேன். எல்லாம் ஆயிற்று... இன்னும் சில விநாடிகளில நீ செத்துப்போயிடுவே... துடிதுடிச்சு...அடுத்தவங்களோட மரண அவஸ்தை, வலி உனக்கும் புரியணும்..."

என்னில் மரண பயம் உருவெடுக்க...

" நான் உன்னைக் காதலிச்சது,கல்யாணம் பண்ணிக்கிட்டது எல்லாம் வெறும் வேஷம் நவா...உன்னைப் பழி வாங்கிறதற்கான நீண்டகால நடிப்பு. என்ன அப்படிப் பார்க்கிறே...புரியல இல்ல..."

என் கடைவாயோரம் நுரை தள்ளியது.

"யாரோ தூக்கியெறிஞ்ச பணத்துக்காக என் காதலனைக் கொன்னவன்டா நீ...ஞாபகமிருக்கா...கஷ்டம்ஸ் ஆபிசர் பிரதாப்...ஆறு மாசத்திற்கு முன்னாடி அநியாயமா ... துடிதுடிக்க வெட்டிப் போட்டியே...அவர் என்ன பாவம்டா செய்தாரு ? ஏண்டா அவரைக் கொன்னே...ஏண்டா..."

அருந்ததி உடம்பு குலுங்கி அழத் துவங்கி,

சடரென்று என் கழுத்தை நெரித்து... என்னைப் போட்டுப் புரட்டி...வெறிபிடித்தவளாய்...பைத்தியம்மாதிரி..." ஏண்டா என் பிரதாப்பைக் கொன்னே...ஏண்டா ...ஏண்..டா.."

நான் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொ...ண்...டி...ரு...ந்...தே....ன்.

[யாவும் கற்பனை]

ரிஸ்கி ஷெரீப்
இலங்கை
16,03.1995

Thursday, October 29, 2009

இந்திய தேசத்து தேவதை


ந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை ஏர்போர்ட் ரன்வேயில் சுழன்று, விருட்டெனக் குலுக்கங்களோடு மேலெழுந்தபோது கூட அதனுள்ளே இருந்த நான் தடுமாறவில்லை.ஆனால் மனசு மட்டும் அல்லாடிக்கொண்டேயிருந்தது.

விமானத்தின் உள்ளிருந்த சொகுசுத்தனம் கூட போலியாகப்பட்டது.

- கடும் பச்சைநிற அன்கர் பீர் டின்னொன்றை உடைத்து வாயில்க் கவிழ்த்தேன்.பொன்னிறத் திரவம் தொண்டைக்குள் இறங்க மறுத்தது.

சிகரட்டொன்றைத் தீக்கொளுத்தியபோது, றோஸ் நிறப் பவுடரில் அழகாயிருந்த அந்த விமானப் பணிப்பெண் வேகமாக வந்தாள். " ஸ்மோக்கிங் ஈஸ் ப்ரொஹிபிட்டட் ஹியர் "

டாய்லெட்டுக்குப் போயாவது ஒரு தம் இழுக்கலாம் என்கிற உற்சாகமும் வராமல்,

 கோபம் காட்டாமல் சிகரட்டை ஆஸ்ட்ரேயில் அழுத்தினேன். அணைத்தேன்.

" ப்ளீஸ்... பாஸ்டர்ன் யுவர் சீட் பெல்ட் " என்றவள் ,அவளாகவே என் இருக்கைப் பட்டியை மாட்டிவிட...மவுனமாகயிருந்தேன்.

அவளது இடுப்பு வளைவுகளை ரசிக்கக் கூடிய மனோநிலையில் நானில்லை. அந்த அழகின் கிறக்கம் உடம்பில் இயல்பாக கிளர்ந்து எழச்செய்யும் உஷ்ணம்கூட இந்த இருபத்தியாறு வயதுக்குள் இப்போது என்னை இம்சைப்படுத்தவில்லை.

பீர் ரொம்பவும் கசந்தது. - என் மனசைப்போல...

- காரணம்...காதல்.

காதல் கசக்குமா?

இந்த நிமிடம் எனக்குக் கசந்தது.

காதல் கசப்பதற்குக் காரணமானவள்...என் தேவ தேவி.

அதுவும்,கடல் கடந்த காதல்.

இலங்கைப் பிரஜையான எனக்கு இந்திய தேசத்துப் பெண்மீது காதல்.அவளுக்கும்தான்.

ஆனால் இந்த நிமிடம்...

அந்தக் காதல் ஒரு கேள்விக் குறியாகிப்போய்...

என் நினைவுகள் பின்னோக்கிச் சுழன்றன.

------------  ------------  -----------  -----------  -----------  --------

ரு வருடத்துக்கு முன்னையதோர் நாள்.

மெட்றாஸ் எனும் சிங்காரச் சென்னைத் தமிழ்நாட்டில் - பூக்கடை எனும் வியாபாரத் தெருவிலிருந்த ஒரு பழக்கடையில் கொஞ்சம் ஆப்பிள்களை வாங்கிக்கொண்டு யதார்த்தமாக தமிழில் விலை கேட்டேன்."எவ்ளோப்பா...?"

கடைக்காரர் மலங்க மலங்க விழித்தார்.

மீண்டும் கேட்டேன்."ஏன்பா...தமிழ் தெரியாதா?"

- பதிலில்லை.

எனக்கு எரிச்சலாய் வந்தது. ஹிந்தியில் கேட்டேன் "ஹிந்தி மாலும்...ஆப்பிள் கித்னா ருபியா...?"

அவன் அதே மவுனமாய்...

நான் உடம்பில் ரொம்பவும் சூடேறினேன்.

- எனக்குத் தெரிந்த [சுமாராக] அத்தனை மொழிகளிலும் கேட்டேன்.

" டூ யூ நோ இங்க்லிஷ்...?"

" மலையாளம் சம்சாரிக்கும்...?"

" தெலுங்கு தெல்சா...?"

- எதற்கும் பதிலில்லை.அப்போதுதான்...

பின்னாலிருந்து சில்லறை சிதறிய அந்த சிரிப்பொலி கேட்டது. திரும்பினேன்.

இளம் மஞ்சள் நிற சல்வாரில் அவள் நின்று கொண்டிருந்தாள்.

- அந்த இந்திய தேசத்து தேவதை.

மனிஷா கொய்ராலாவின் முகச்சாயல்,ரவீனா டாண்டனின் உயரமும் நிறமுமாக...மூவாறு வயதுத் தோற்றத்தில் குழந்தைத் தனமாய்...அதே குழந்தைத்தனமான புன்னகையோடு...

" க்யா?" - என்ன? என்றேன் ஹிந்தியில்.

அவளும் அதே ஹிந்தியில் சொன்னாள் [அதன் தமிழ் வடிவம்]

" நீங்கள் என்னதான்... எத்தனை முறைதான் கேட்டாலும் அவனால் பதில் சொல்ல முடியாது மிஸ்டர்...மிஸ்டர்..."

" மிப்ரா..."

" மிப்ரா...ஏன்னா அவனொரு செவிட்டு ஊமை. கடை முதலாளி எங்கேயோ வெளியில போயிருக்கார்போல...அவன் எடுபிடியாளு. நான்தான் இங்கே தினமும் வந்திட்டுப் போறேனே.அதான்...முதலாளி வரும் வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..."

நான் தாமதித்தேன்.

முதலாளி வந்ததும் விலை கேட்டுப் பணம் கொடுத்தேன்.

எனக்காகக் காத்துக்கொண்டிருந்த அவளுடன் - அந்த தேவதையுடன் பேசிக்கொண்டே பாரிஸ் கார்னர் வரை நடந்தேன். "உங்க பெயர்?" - கேட்டேன்.

வலக் கன்னத்தில் இலேசாகக் குழிவிழச் சிரித்தாள்."யாஸ்மின்..."

பெயர் பெர்பியூமாய் மணத்தது. அவளும் மணத்தாள்.

"உங்களுக்குக் கேரளாவா?"

மென்மையாகச் சிரித்தேன்.

பலரும் கேட்பதைத்தான் அவளும் கேட்டிருக்கிறாள்.ஏனெனில்,கேரளத்து முகச்சாயல் எனக்கு.

" இல்லை...சிலோன் - சிறீலங்கா."

- நம்ப முடியாமல் பார்த்தாள். பிறகு நம்புவதாகச் சொன்னாள்.

பாரிஸ் கார்னர் வரைக்கும் இலங்கை இனப்பிரச்சினை பற்றியே அலசிக்கொண்டு நடந்து, அவளுக்கான பஸ் வந்ததும் ஏறிப்போனாள்.நானும் கொஞ்சம் சோர்ந்துதான் போனேன்.

தென்றலாய் வந்து மணம் பரப்பி.தென்றலாகவே போய்விட்டவள் அன்றைய என் தூக்கத்தையும் கெடுத்துச் சிதைக்கத்தான் செய்தாள்.

அப்புறம்...

யதேச்சையாக சில சந்திப்புக்கள்...நான் அவளையும் அவள் என்னையும் கேட்டுப் பல சந்திப்புக்கள்...

இப்படியாக -

வர்த்தக நோக்கில் வாரத்திற்கொரு முறை நான் இந்தியா போகும்போதெல்லாம் யாஸ்மினைச் சந்தித்து...நான் இலங்கையில் இருக்கும்போதெல்லாம் அவள் எனக்குத் தொலைபேசி.... நமக்குள்ளிருந்த ஆத்மார்த்த அன்பும் நேசமும் படிப்படியாக வலுப்பெற ஆரம்பித்து.....காலவோட்டத்தில் ஒருநாள்,

நாமிருவரும் ஒருசேர நடந்து, சடுதியாகப் பெய்த மழைக்காக  மவுண்ட் ரோட்டில் ஒரு ரெஸ்டாரெண்டில் ஒதுங்கி...பாதாம்கீருக்கு ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருந்த அந்த இனிப்பான சந்தர்ப்பம் வாழ்க்கையின் கடைசி மரணத்தறுவாய் செக்கன் வரைக்கும் மறக்க முடியாதது. தன் றோஸ் நிற உதடுகளை விரித்து அவளாகவே சொன்னாள்.

" நாம ரெண்டு பேரும் காத்லிச்சாலும் தப்பில்லன்னு தோணுது மிப்ரா..."

"வாட்..." -  என்க்குள் படர்ந்த மயிலிறகு சுகம் தாண்டியெழுந்த அதிர்ச்சி களைவதற்குள்...

" யெஸ் ஐ லவ் யூ மிப்ரா..மே தும்சே பியார் கர்த்தாஹு " - மீண்டும் எனது ஆறடியுயர உடம்பு பூராவும் சிலிர்த்தது.

நான் மவுனமாயிருந்து பின் சொன்னேன் " ஐ லவ் யூ டூடா "

- யாஸ்மின் என் நெஞ்சில் மிருதுவாக சாய்ந்து கொண்டாள்.

----------  ----------   ---------  ---------  -----------  ---------  -----------  ------------

ப்படித் துவங்கிய நம் காதல் கடந்த ஒரு வருட காலமாக எதுவிதப் பிரச்சினைகளுமின்றி ரொம்பவும் இயல்பாகத்தான் போய்க்கொண்டிருந்தது.ஆனால் விதி...

இப்படி நடக்குமென்று தெரிந்திருந்தால் நேற்றைய சூனிய தினத்தில் மட்டும் நான் என் தேவதையைச் சந்திக்காமலேயே இருந்திருப்பேனோ என்னமோ...

நேற்று -

மெரீனா பீச்சில் கைகோர்த்து உலாவிக் கொண்டிருந்தோம்.

பக்கத்தே கம்பியூட்டர் ஜாதகம் பார்த்துக் கொண்டிருந்த ஒருவனை சிலர் சூழ்ந்திருந்தார்கள்.

" சும்மா ஒரு ஜோதிடம் பார்ப்போமா...?" என் தேவதை ஆவலாய்க் கேட்க.எனக்கு இந்த ஜோதிடம்,சாஸ்திரங்களிலெல்லாம் ந்ம்பிக்கையில்லாத போதும் மறுக்கமுடியவில்லை. மறுத்திருக்கலாம்.

அந்த அவன் - ஜோதிடத் துரோகி என்னையும் என் உள்ளங்கை ரேகைகளையும் மாறி மாறிப் பார்த்து ஏதேதோ சொல்லிக்கொண்டே போக, என்னை விடவும் ஆவலாகக் கேட்டவள் என் தேவதைதான்.

"நீங்க பிறந்த நேரம் நல்ல நேரம்.ஆனால் இப்போ உச்சியில சனியிருக்கு.நவ மாசம் வரும்வரைக்கும் நம்பிக்கைகள் ஈடேறாது. உங்க ராசி தனு.மூலம்,பூராடம்,உத்தராடத்து முதற்கால் மனமகிழ்ச்சி,ஆயுள்ரேகை பலமாயிருக்கு.ஆனால்..."

அந்த ஆனாலில் வந்தது வினை.

" என்ன?" - என்றேன் சுருதியேயில்லாமல்.

" சொல்லட்டுங்களா...?"

" சொல்லுப்பா "

" உங்க மணவாழ்க்கை ந்ல்லாயிருக்காது...இரட்டை விவாகம்னு ரேகை சொல்லுது..."

நான் அதிர்ந்தேனோ இல்லையோ , என் தேவதை உடம்பு முழுவதும் அதிர்ச்சிகளை உள்வாங்கியதை என்னால் உணர முடிந்தது.சட்டென்று களையிழந்து அவள் முகம் கறுத்துப்போக...

நான் பிடிவாதமாக அவளை அந்தயிடத்திலிருந்து நகர்த்தினேன்.

ஆனாலும், ஏதோவொன்றை இழந்துவிட்ட சோகம் மட்டும் அவளில் தெரிந்தது. ஜோதிடக்காரன் மேல் வந்த கோபத்தை விழுங்க முடியாமல்...

மெரீனாவின் ஓரமாய்ப் போய் உட்கார்ந்தவள்,உடம்பு குலுங்கி அழ ஆரம்பித்தாள்.ஆறுதல் படுத்தத் தெரியாமல் தடுமாறினேன்.

' தனக்கு மட்டுமேயானவனுக்கு இரண்டு தாரங்களென்றால் எந்த சராசரிப் பெண்தான் - எந்தக் காதலிதான் தாங்கிக் கொள்வாள்?'

"வெறும் வாய்ப் பிழைப்பும் வயிற்றுப் பிழைப்புமாக ஜோதிடமெல்லாம் சுத்தப் பொய்டா..."

" இல்ல... என் மனசுக்கு ஏதோ பயமாப்படுது...உங்களை இன்னொருத்திகூட பங்கு போட்டுக்கிற அளவுக்கு வெறும் சினிமாத்தனமான தைரியம் எனக்கில்ல மிப்ரா..."

" ஏண்டா சும்மா பயப்படுறே...ஃபர்கெட் இட் யாஸ்மி...உனக்கு நம்பிக்கையில்லேன்னா நாம இன்னுமோர் இடத்திலேயும் இதேமாதிரி பார்ப்போமே...அவன் என்ன சொல்றான்னும் கேட்போம்.ப்ளீஸ் அழாதேடா."

" சரி வேறோர் ஆள்கிட்டேயும் பார்ப்போமே..."என்ற என் தேவதை கொஞ்சம் இயல்புக்கு மாறினாள்.

காதல்... பைத்தியக்காரத்தனமாய் என்ன பாடாய்ப்படுத்துகிறது?சிறுபிள்ளைத்தனமாய் சிந்திக்கத் திராணியற்று... சிறுதுளிச் சந்தோசமோ,துக்கமோ மனிதனை எத்தனை தூரம் கொண்டு போகிறது...

ஆட்டோவில் ஏறிப் பறந்தோம்.

சாந்தி தியேட்டர் பக்கமாக - தனது சில்லறைச் சாமான்களோடு அறுபது வயதைத் தாண்டிய ஒரு பெரியவர் - ஜோதிடர் தெருவோரம் கிடைத்த சைக்கிள் கேப்பில் கடை பரப்பியிருக்க,நெஞ்சுக்குள் பயப்பந்து சுழன்றடிப்பதையும் மீறி அவர் பார்வைக்கு கையை விரித்தேன்.

யாஸ்மின் மிகுந்த ஆவலோடு பார்க்க,அவர் சொல்லத் தொடங்கினார்.

" தனு ராசிக்காரரான உங்களுக்கு இப்போ உச்சியில சனியிருக்கு.மூலம்,பூராடம்,உத்தராடத்து முதற்கால் மனமகிழ்ச்சி...ஆனாலும் உங்களுக்கு ரெண்டு சம்சாரங்கள்னு ரேகை சொல்லுது..."

என் தலையில் இடியிற்ங்கியது.நெஞ்சுக்குள் பக்கென்று ப்லூன் வெடித்தது.

- யாஸ்மின் கண்களில் பொலபொலவெனக் கண்னீர்...

அவள் என்னைக் கொஞ்சம் சந்தேகமாகப் பார்த்த பார்வையில் எனக்குள் முள் தைத்தது.

எனது ஆறுதல் வார்த்தைகள் அவளில் எடுபட்டதாகவும் இல்லை.

இருள் போர்வை போர்த்த, " வீட்டுல தேடுவாங்க...நேரமாயிடுச்சு..."என்று யாஸ்மின் புறப்பட்டுப் போனாள்.

இந்தியாவை விட்டு இலங்கைக்குத் திரும்பும்போதெல்லாம் என்னை ஏர்போர்ட் வரை வழியனுப்ப வரும் என் இந்திய தேசத்து தேவதை இன்றைக்கு ...நான் காத்திருந்து பார்த்தும் வரவேயில்லை.

---------  ---------  --------  --------  --------  ---------  ---------  ---------

ந்தியன் ஏர்லைன்ஸ் கொழும்பு ஏர்போர்ட் ரன்வேயில் வட்டமடிக்கும் போதுதான் சுதாகரித்து சுயநினைவுக்கு வருகின்றேன்.என்றாலும் மனசு பூராவும் என் இந்திய தேசத்து தேவதையே வியாபித்திருக்கிறாள்.

நான், அடுத்த தடவை - அனேகமாக அடுத்த வாரம் மீண்டும் இந்தியா செல்லும் போதாவது அவள் தெளிந்திருப்பாளா? இல்லை...எமக்கிடையிலேயான இடைவெளி அதிகரித்திருக்குமா?

எதுவுமே புரியாமல் மிகவும் குழம்பிப் போய்த்தான் இருக்கிறேன்.

 [ யாவும் கற்பனை ]

ரிஸ்கி ஷெரீப்
இலங்கை
13.05.1996

Sunday, October 18, 2009

திருப்தி தரல்லேங்க...



சிகரட் புகைப்பது, வெற்றிலை போடுவது, தண்ணியடிப்பது போன்ற சின்னச் சின்ன என்டர்டைன்மென்ட் தப்புக்களையே பாவம்னு நினைக்கிறவன் நான். பெயர் இந்திரன் என்றாலும் சுமாரான் அழகன்.பெயரைப் போலவே நல்ல குணநலன்கள் எனக்கு.அப்பிடியிருக்க...இப்போது கொஞ்சம் நாட்களாக என்
மனதுக்குள் ஒரு சஞ்சலம்...குறை.

உங்களிடம் சொல்ல முடியாத சில அந்தரங்கஙகளை என் உயிர் நண்பன்
அசோக்கிடம் சொல்கிறேன்.

 ஆபிஸ் கென்டீனில் வைத்து அசோக்கை சந்தித்தேன்
.
_ அசோக் "என்னடா?"வென்று நிமிர்ந்தான்.கையில் இருந்த காபி கோப்பையை மொசைக் மேசையில் வைத்துவிட்டுக் கேட்டான்."ஏண்டா முகம் வாடிப்போயிருக்கு?"

நான் மென்மையாக - விரக்தியாகப் புன்னகைத்தேன்
.
  " ஏன்?" அவனாகவே மீண்டும் கேட்க,

- மவுனமாயிருந்தேன்.

" ஏன்... வீட்டுல மனைவிகூட ஏதாவது பிரச்சினையா...?"

' சீச்சீ... அப்பிடியொன்னுமில்ல...ஆனால்..."

" ஆனால்... வாட் யூ மீன்?"

" கல்யாண்ம் ஆனதிலிருந்து மனசு சரியில்லடா...இப்போ ஆறு மாசமா மனசுக்குள்ள எரிஞ்சிட்டிருக்கேன். ஐ மீன் செக்ஸ்... மனைவியோட கட்டில் சுகம் திருப்தி தரல்ல..."

-அசோக் புரியாமல் மவுனமாகப் பார்த்தான்.

நானும் அவனையே பார்த்து... சொன்னேன்.

" என் பொண்டாட்டி ம்காலட்சுமி மாதிரி நல்ல அழ்கு...உன்க்குத் தெரியுமே...குண்த்திலேயும் சொக்கத் தங்கம்டா ...ஆனால் அவளோட அணைப்பு,சுகம் மட்டும் ஏனோ எனக்குத் திருப்தியாயில்ல்...அவளுக்குத் தாம்பத்தியத்தில ஈடுபாடு இல்லையோன்னு தோணுது."

அசோக் சிகரட் பற்ற வைத்து,அதன் நிக்கோடின் புகையை ஒரு இழுப்பு இழுத்து மீண்டும் மவுனமாக நெற்றி வருடி யோசித்தான்.

" சரி...ஒரு வெரைட்டி வேணும்...வீட்டு சாப்பாடு ருசிக்கல்லேன்னா கடையில சாப்பிடுறது மாதிரி...ஒரு நாளைக்கு நீயும் வெளியில சாப்பிட்டுப் பாரேன்."

நான் நெற்றியில் வியர்த்து...அதிர்ந்து கேட்டேன்." வாட்?"

" இன்னைக்கு சாயந்திரம் நான் உன்னையோர் விடுதிக்குக் கூட்டிட்டுப் போறேன்.அப்புறம் என்னன்னு பார்க்கலாம்."

" யூ மீன் ப்ரெஸ்டிடியூஷன்..?"

அசோக் " யெஸ்" என்று தலையாட்டினான்.

............-------------..............------------.................

தமான மாலை நேரம்,

-நானும் அசோக்கும் ஊருக்கு ஒதுக்குப் புறமாகயிருந்த அந்தத் தனி பங்களாவுக்குள் நுழைந்ததும்,அங்கிருந்த ஷகீலாத் தனமான குண்டு மாமி அசோக்கை வாயெல்லாம் பல்லாக வரவேற்றாள்.அந்த வரவேற்பிலேயே அசோக்குக்கு அங்கே ஏற்கனவே பரிச்சயமும் நிறையப் பலான அனுபவமும் இருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

சம்பிரதாயங்கள் முடிவடைந்து,பெண்களின் புகைப்படம் பார்த்து,பணம் கொடுத்து... அசோக் வரவேற்பறையில் காத்திருக்க,குண்டு மாமி காட்டிய அறைக்குள் நுழைந்தேன்.

உடம்பு படபடத்தது.

காத்திருக்க ஆரம்பித்தேன்.

புதிய அனுபவம்...அதிலும் தப்பான -  தவறான அனுபவம்.

மனசு பூராவும் குறுகுறுத்தது.

யோசிக்க ஆரம்பித்தேன்.

விபச்சாரிகள் உருவாவதில்லை.சூழ்நிலைக் கைதிகளாக உருவாக்கப்படுகிறார்கள் என்பதே என் எண்ணம். காத்ல் தோல்வி,காதலன் ஏமாற்றிக் கைகுழந்தையோடு விட்டுச் செல்லல்,நோயாளி அம்மாவும் வய்துபோன அப்பாவுமாக மருந்து வாங்கக்கூட காசில்லாத குடும்பம்,அக்காவின் கல்யாண இழுபறி,சீதனக் கொடுமை,குடிகாரக் கணவன்,சமூக ஏமாற்றம்...இப்படியாக விலைமாதர்கள் தமக்குள்ளொரு கதை வைத்திருப்பதை சினிமாக்களும் நாவல்களும் எத்தனை விவரித்திருக்கின்றன.

என்றாலும்,
எங்கேயோ பிறந்து வளர்ந்து யாரென்று முகவரியறியாத ஒரு பெண்ணுடன் இன்று உறவு வைத்துக்கொள்ள வேண்டிய நிலையில், அறிமுகமேயில்லாத இப்பெண்ணின் கதை என்னவாகயிருக்கும்?

- கேட்டுப் பார்க்க வேண்டும்.

பாவ்ப்பட்ட புதிய இடம் மனதுக்குள் பயத்தையும் ஏற்படுத்த,

சாத்தியிருந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு வந்தாள் அவள். நான் இதுவரை எதிர்பாத்திருந்தவள். புகைப்படம் பார்த்துத் தேர்ந்த சில மணிநேர வாடகைப் பெண். இருபத்தியைந்து வயதுக்குள் உடம்பு முழுக்க இளமையையும் செழுமையையும் பத்திரப் படுத்தியிருந்தாள். சினிமாவில் மட்டும் வாய்ப்புக் கிடைத்திருந்தால்...நிச்சயமாக இன்னுமொரு குஷ்புவாக ரசிகர்களைக் கோவில் கட்ட வைத்திருப்பாள்.

விபச்சாரியாக ஆக வேண்டுமென்பது இவள் விதி{?}

- கதவைத் தாளிட்டு வந்தவள்,கட்டிலில் என்னை உரசி அமர்ந்து கொண்டாள்.

என் ந்ரம்பு நாளங்கள் சூடேறின.

இப்போதுதான் குளித்துவிட்டு வந்திருந்தாள் போலும்...ஷாம்பு வாசனையுடன் சேர்ந்த பெர்பியூம் கலவையும் மெல்லிய சேலை தாண்டியிழுத்த மேனியழகும் கிறங்கடித்தன. அவளது அண்மையில் என் முகத்தில் வியர்வை முத்துக்களை உணர்ந்தேன்.

அவளாகவே அவசரப்பட்டு என் சேர்ட் பட்டன்களைக் கழற்ற எத்தனிக்க...தடுத்தேன். "ஏன் இந்த அவசரம்? கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாமே..."

- அவள் விஷமமாகப் புன்னகைத்தாள்.

" உன் பெயர் என்ன்?" - கேட்டேன்.

" அஞ்சு " என்றாள் பிஞ்சுக் குரலில்.

" முதல் அனுபவமா?" என்றாள்.

" ஆம் " என்றேன்.

அவள் மீண்டும் புன்னகைத்தாள்.

" நீ ரொம்ப அழகாயிருக்கே...படிச்ச பொண்ணு மாதிரியும் தெரியுறே...அப்போ ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தே..."- கேட்டேன்.

அவள் கலகலவெனச் சிரித்தாள். என் கழுத்தில் அவள் கரங்களை மாலையாகப் போட்டுக்கொண்டாள். " இது என் தொழிலில்ல.ஏன்னா...கோடிகள், ஏழு தலைமுறைச் சொத்துக்கள்னு நான் வசதியா வாழ்றவ...டைல்ஸ் பாக்டரி மட்டும் ரெண்ணு இருக்கு..."அவள் சொல்லிக் கொண்டே போக,

நான் திக்கென்று அதிர்ந்தேன்.

" அப்போ ஏன்?"

" என் புருஷன் கூட செக்ஸ் வெச்சிக்கிறதில திருப்தியில்ல. அதான் இங்கே ஒரு சேஞ்சுக்காகவும் உடம்போட தேவைக்காகவும் வந்துட்டேன். இதை நடத்துறவங்க எனக்குத் தெரிஞ்சவங்க"

என் மூளைக்குள் பொறி தட்டியது. விழிகளுக்குள் என் மனைவியின் நிழல்ரூபம் தெரிந்தது.

" என்ன சொல்ற நீ...உன் புருஷன்..." - தடுமாறினேன்.

அவளது விழிகளில் தாபம். ஏக்கமும் எதிபார்ப்புமாகச் சொன்னாள் " என் புருஷனுக்கும் உங்க வயசிருக்கும்...பிசினஸ் பிசினஸ்னு உலகம் சுற்ற மட்டுமே அவருக்கு நேரமிருக்கு...சிலவேளை என்கூட இருந்தாலும் ஏதோ கடமைக்கு மாதிரியான அவரோட செக்ஸ் நாட்டம் எனக்குத் திருப்தி தரல்ல.சந்தோசம் தரல்ல.அதான் புது அனுபவம் தேடி இங்கே வந்தேன்."

அவள் சொல்லி முடிப்பதற்குள்...

நான் அவளது கரங்களைத் தட்டிவிட்டு,சடாரென்று எழுந்து,வாசலை நோக்கி நடந்து... அவள் என் பின்னாலேயே அதிர்ச்சியாய் ஓடிவர...கதவைத் திறந்துகொண்டு வெளியேறினேன்.

வரவேற்பறையில் இருந்த அசோக்கும் அதே அதிர்ச்சியோடு ஓடிவந்து பதறியவனாகக் கேட்டான் " என்னடா பேய் பிடிச்சவன் மாதிரி ஓடிவர்றே..."

நான் அவனையும் இழுத்துக்கொண்டு வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். தெளிந்திருந்தேன்.நிரம்பவும் தெளிந்திருந்தேன்.

ந்ண்பனைப் பார்த்துச் சொன்னேன்.

" மனைவியோட சுகம் திருப்தி தரல்லேன்னு நான் புதுச்சுகம் தேடி இங்கே வந்திருக்கேன்.இதேநேரம் அவளை என்னால திருப்திப்படுத்த முடியல்லன்னா அவள் எங்கே போவாள்டா...?ஏன் நான் யோசிக்க மறந்துட்டேன்... என் மனைவி எனக்கு மட்டுமே மட்டும்னு நான் எதிர்பார்க்கிற மாதிரி நான் சுத்தமாக இருக்கணும்னு அவளும் எதிபார்க்கலாமில்லையா...சொல்லு அசோக்..."

வார்த்தை வராமல் என் நா தழுதழுக்க -
அசோக் என்னைப் பெருமிதத்தோடு பார்த்தான்.
பார்த்துக்கொண்டேயிருந்தான்.

[யாவும் கற்பனை]

ரிஸ்கி ஷெரீப்
இலங்கை
15.01.1995

Saturday, October 17, 2009

இயற்கைக்கு நேரமில்லை



" ராத்தா...வா ராத்தா பட்மிண்டன் விளையாடுவோம்."
இன்னும் ஏழு வயது நிரம்பாத சப்ராஸ் தனது றோஸ்நிற உதடுகளை அழகாய் விரித்து, ஆப்பிள் நிறத் தேகத்தை சிலிர்த்து, செம்பட்டைத் தலைமயிரைக் கோதிக்கொண்டே கேட்டான்.
" வா ராத்தா விளையாடுவோம்."
"ம்ஹும்...எனக்கேலாது..."
- அவித்த வெரலிக்காயை மிளகாயும் உப்பும் போட்டுப் புரட்டி ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த சாமிலா அலட்சியமாகச் சொல்ல,
" வா ராத்தா"
"ஏலான்னு சொல்றேனுல்ல'"
" அப்போ...கிரிக்கெட் விளையாடுவோமா?"
- சாமிலா மவுனமாக வெரலிக்காயை சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
சப்ராஸ் வந்து அருகில் ஒட்டிக்கொண்டான்.
" அப்போ... வயலுக்குப் போய் பட்டம் விடுவோம் வர்றியா ராத்தா?"
" எனக்கேலா... நீ வேணுமின்னாப் போ"
சாமிலா கடிந்துகொள்ள, சப்ராஸ் அழத்துவங்கினான்.
" நான் உன்னோட அச்சுப் புச்சி ஆறு மாசம் கோவம்...நீ போ...நான் உம்மாகிட்ட சொல்றேன்."_அழுதுகொண்டே சப்ராஸ் நகர்ந்துபோக,


பதினான்காம் வயதின் ஆரம்பத்திலிருந்த சாமிலா, மிளகாய்ப் பொடி வைத்த பேப்பர் துண்டையும் தன் நாவால் ஈரப்படுத்தி ருசித்துச் சப்புக் கொட்டினாள்.


சாமிலாவுக்கு சந்தனம் மங்கிய மாதிரியொரு நல்ல நிறம். செழுமை பரவ ஆரம்பித்த தேகம். அடர்த்தியான கூந்தல். ஆனால், தாவணியோ சல்வாரோ அணியும் அள்வுக்கு அவல் தேகமோ, வயதோ, பெண்மையோ இன்னும் பக்குவப்படவில்லை. பருவக்கொடி அவள்மீது ப்டராமல் ஓரமாக ஒதுங்கிப்போக, எதையும் அறியாத வெகுளியாய்... இன்னும் சின்ன்ப் பிள்ளையாட்டம்.
..

உம்மா உள்ளுக்குள் கவலைப்பட்டு அழத் துவங்கியதோ இல்லைஅவளது அடிவயிற்று நெருப்பின் சூடோ அறியும் திராணியும் சாமிலாவுக்கு இல்லை. உம்மாவுக்கு ஈடாக வாப்பாவும் தன் வேதனையை மனதுக்குள் ரகசியமாகப் பத்திரபடுத்தியிருந்தார்.

 பூப்பூக்கும் நந்தவனம் இன்னும் பூப்பெய்தாமலேயே இருந்ததில் அவர்களது வருத்தத்தில் நிரம்பவும் நியாயம் இருந்தது. என்ன செய்ய... விதி வரைந்த பாதைதானே வாழ்க்கை ஓடுது.



ன்றொரு நாள்;
உம்மா, வாப்பாவிடம் ரகசியமாகச் சொன்னதையும் சாமிலா ரகசியமாகக் கேட்கத்தான் செய்தாள். ஆனாலும் எதுவும் புரிந்தும் புரியாத நிலையில் சாமிலா எதற்கும் கவலைப்பட்டதாகவும் இல்லை.


" ஏங்க... என்க்குப் பதிமூன்று வயசு நடக்கும்போதே நான் பெரிய மனுசியாயி இருபது வயசுல குழந்தையும் பெத்தாச்சு. ஆனால் சாமிலா இன்னும் பட்டுப்போன மரம் மாதிரி...பயமாயிருக்குதுங்க...யாராவது நல்ல டாக்டர்கிட்டப் போலாமா...?"


"வேணாம் ராபிதா இன்னும் கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போம்.இயற்கை வளர்ச்சிங்கிறது இறைவனோட கையில உள்ள விஷயம். டாக்டரால என்ன செய்ய முடியும்?சொல்லு செடிக்கு தண்ணீர் வேணும்னா ஊத்தலாம்..பூக்க வைக்க முடியாது."
ராபிதா மவுன்மாகிப் போனாள்.


சாமிலா மிளகாய்த் துகள் ஈரக்கசிவு படிந்த வெற்றுப் பேப்பரைத் தூரமாக எறிந்து, பக்க்த்து வாழை மரத்தின் இலையொன்றை எம்பிப் பிடித்து...இழுத்து கைகளைத் துடைத்துக்கொண்டாள்.
உம்மா அழைப்பது கேட்டது..." சாமிலா... ஏய் சாமிலா..."" "என்னம்மா?"_முற்றத்தில் இருந்தே குரல் கொடுத்தாள்.
" இஙக பாருடீ...த்தா...குசினியில வேலையாயிருக்கேன் நான்...தம்பியைக் கூட்டிட்டுப் போய் கொஞ்சம் விளையாட்டுக் காட்டேன். வாயேன்மா..."
" தம்பியை இங்கே வரச்சொல்லுங்க:"
சப்ராஸ் கண்களைத் துடைத்துக்கொண்டு ஓடி வந்தான்.
"உம்மாகிட்ட போய் பத்தி வெச்சியா?"
" இ...ல்ல"
" என்ன வெவ்வே..."

சாமிலா சப்ராஸின் முதுகில் இலேசாக இரண்டு தட்டுத் தட்ட, அவன் இவளைத் தன் சின்னக் காலால் உதைக்க, இவள் பதிலுக்கு அவனது காதைத் திருக... அவர்களுக்கிடையே ஒரு சின்னச் சண்டை மூண்டது.
சப்ராஸ் சாமிலாவின் முதுகில் தன் இரு கைகளையும் வைத்து பலமாகத் தள்ளிவிட...

சாமிலா "உம்மா..."என்று வீறிட்டவளாய் கால் இடறி பக்கத்துப் பூஞ்செடியோரமாகப் போய் விழுந்தாள்.விழுந்த வேகத்தில் ஏதோவொரு உணர்வில்...அவளது இடுப்புப் பகுதியில் கவுனுக்கு மேலாக ஏதோ தண்ணீர் மாதிரி... ரத்தம்...
சப்ராஸ் பயத்தில் உறைந்து போனான்.
சாமிலாவின் குரலுக்குப் பயந்தவளாக உம்மா பதறியவளாக ஓடி வந்தாள்.

" என்னடா பண்ணினே அவளை..."உம்மா பூஞ்செடிக்குள் பூக்குவியலாக விழுந்திருந்த சாமிலாவின் கரம் பிடித்துத் தூக்க...விழிகள் அகல விரிந்தன.

நெஞ்சு படபடக்க...எதையுமே உணர முடியாமல் சாமிலாவுக்குள் ஒரு பயம் பற்றிக்கொண்டது.

_உம்மாவின் சந்தோசக் கண்களில் ஒளி வெள்ளம் படர்ந்து...கண்ணீர் கோடிட்டுப் போக...உடனே சாமிலாவை வாரியணைத்துக்கொண்டு உள்ளே ஒடினாள்.


சூழ்நிலை யதார்த்தம் புரியாத சப்ராஸ் அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். நெடுநேரமாக...


"ஏன் ராத்தாவுடைய உடுப்பெல்லாம் ரத்தம்? உம்மா அழுதுட்டே போறா...ராத்தாவுக்கு என்னமாகிலும் ஆகிப்போய்... வாப்பா வந்து என்னை அடிப்பாரோ...ராத்தாவுக்கு ஒன்னும் ஆகக்கூடாது.ஒன்னும் ஆகக்கூடாது...'
சப்ராஸ் வெடவெடத்து நடுங்கி,கண்கள் குளமாகிப் போயின.

எட்டிப் பார்த்த எதிர் வீட்டு மாமியிடம் "மதினி சாமிலா மவள் வயசுக்கு வந்துட்டா..."என்று உம்மா சொன்னது அந்தச் சிறுவனுக்குப் புரியவேயில்லை.

அச்சம் அவனை முழுமையாக ஆட்கொண்டது.
" வாப்பா வந்து என்னை அடிப்பாரோ..."
உடம்பில் நடுங்க ஆரம்பித்தான் சப்ராஸ்.

- நிறைவு -

- ரிஸ்கி ஷெரீப்,
இலங்கை

17-03-1995

Friday, October 16, 2009

உயிர் கொல்லித் தொழில்


ரு போர்வீரனாகக்கூடிய- போர்வீரனுக்குரிய அத்தனை தகுதிகளும் எனக்கிருக்கின்றனவே...போராட்டகுணம் உட்பட...அப்போ நான் ஏன் ஆர்மியில் சேரக்கூடாது?


- கொஞ்சம் நாட்களாக எனக்குள் விஸ்வரூபித்துப் பரவிப்போயிருக்கின்ற யதார்த்தபூர்வமான நினைப்பு இது.


தற்போதெல்லாம் நினைத்த நேரம் தம் படைகளுக்கு ஆள் சேர்க்கும் இலங்கை அரசு என்னை மட்டும் ஏற்றுக்கொள்ளாதா என்ன?


இருபத்தியைந்து வயதில், ஆறடி உயரத்தில், பரந்த மார்பையும் முறுக்கேறிய கரங்களையும் வலுவான தோள்களையும் கொண்ட திடகாத்திரமான உடம்பு எனக்கு.

 தெளிவான கண்பார்வை... கூர்மையான செவிப்புலன் தவிர பீஏ படிப்பு. மரதன், சைக்கிளோட்டம், நீச்சல், புட்பால் என அத்தனை விளையாட்டுக்களிலும் ஈடுபாடு. இவற்றுக்கப்பால்....அதிக போர்வீரர்களுக்கு இல்லாததோர் அடிஷ்னல் குவாலிபிகேசன் என்னவென்றால்...நான் விரும்பும்- என்னை விரும்பும் கவிதைகள் அடங்கிய இலக்கிய வெறி.

................................................................

"நான் ஆர்மியில் சேரப்போறேன்..."

- என்றதும் என் பெற்றோர் என்னைப் புழுவாகப் பார்ப்பார்கள் என நான் நினைக்கவில்லைதான்.அவர்களது முகத்தில்அப்படியொரு அதிர்ச்சி கலந்த பயம் எழுமென்று நான் எதிர்பார்க்கவும் இல்லைதான்.

 என்றாலும்...

அவர்களுக்குள் ஒரு கசப்பான சோகம் படிவதை என்னால் உணர முடிந்தது.

 உம்மா சோபையிழந்து போன தன் முகத்தில் சுருக்கங்களைக் கொணர்ந்து.... கண்களை அகல விரித்துப்பார்க்க,


சமையல் கட்டோரமாய் ஒட்டியிருந்த பாத்ரூம் வாசலுக்கு அண்மித்து, சுவரில் தொஙகிய ரசம்போன கண்ணாடியில் முகம் பார்த்து சவரம் செய்துகொண்டிருந்த வாப்பா திடுமென் நிமிர்ந்து " ஹூவ் " எனத் தடுமாறினார்.

 அவர் தாடையில் பிளேட் கீறியதில் கோடாய் ரத்தம் வழிந்தது.
"என்ன சொன்னே? " வாப்பா கேட்க...
-நான் தடுமாறினேன்.


" இவனுக்குப் பைத்தியம் கிய்த்தியம் பிடிச்சிருக்கு போல...பெரிய்ய இவரு... ஆர்மியில சேரப் போறாராம் " உம்மா மெல்லமாய்ச் சொல்ல...நான் மவுனமாயிருந்து பின் சொன்னேன்.


"நானும் பீஏ முடிச்சு ஒரு வருஷமாச்சு. இன்னும் வேலை கெடைக்கல, எந்தத் தொழிலுமே கெடைச்சபாடில்ல. என்ன பண்றது... வீட்டுல உட்கார்ந்து தண்டச்சோறு சாப்பிட்டு... எத்தனை நாளைக்கும்மா... ஏண்டா பொற்ந்தோம்னு எல்லாமே வெறுத்துப்போச்சு. அதான்... ஆர்மியில ஆள் எடுக்கிறானாம்... பேப்பர்ல பார்த்தேன். எழுதிப்போடலாம்னு...'


உம்மா மீண்டும் பயத்தில் தடுமாறினாள்.

வாப்பா சுள்ளென்று வார்த்தைகளைச் சீறினார்.

" உனக்கு சாகணுமனா எங்கேயாவது கிண்ற்றிலேயோ குளத்திலேயோ விழுந்து செத்துப்போ. தவிர...கை காலில்லாம முண்டமா ஏண்டா சீரழியணும்...எதற்குடா இந்த விபரீத ஆசையெல்லாம்...தொழில் செய்யப்போறானம் தொழில்...அது கிடைக்கிற் நேரம் கிடைக்கட்டும். அதுவரையில பேசாம வீட்டிலேயே இரு..."


வாப்பாவின் கண்களில் தெரிந்த கொவ்வைச் சிவப்பை எதிர்கொள்ள முடியாமல் மவுனமாய் நான் என் அறைக்குள் நடந்தேன். வாப்பாவை எதிர்த்து வாதிடக்கூடிய தைரியம் எனக்கில்லை. மரியாதை கற்றுத்தந்த பாடமது.


உம்மா என் பின்னாலேயே வந்தாள்.


" டேய்...டேய் இந்த விபரீதமான ஆசையெல்லாம் வேண்டாம்டா... ஆர்மிக்காரங்க குடும்பமே இன்னைக்கு வயித்துல நெருப்பைக் கட்டிட்டிருக்காங்க. அதெல்லாம் நம்ம நாட்டில உயிர்ப்பலியெடுக்குற தொழிலாப்போச்சு. வேணாம்டா... பட்டினி கெடந்தாலும் இந்த ஆர்மித் தொழிலுக்குப் போக நெனைக்காதேடா... உன்னை அங்கே அனுப்பிட்டு நானும் வாப்பாவும் மனம் வெந்து இங்கே சாகணுமா என்ன... வேணாம்டா..."

உம்மாவின் கண்களில் கண்ணீர் மழை.
என் மனதுக்குள் ஏதோ அடைத்தது.


" த்த பாரு நீதான் கதை கவிதை இலக்கியம்னு பேப்பருக்கெல்லாம் எழுதுவியே... அந்த மாதிரியேதாவது ஒரு கம்பனியில கெளரவமானதொரு தொழிலைத் தேடிக்க மவன்... ஆர்மியெல்லாம் மறந்துடுடா...'


உம்மா சொல்லிக்கொண்டே போனாள்.... பத்திரிகைத்தொழில் இன்று இராணுவ வாழ்க்கையை விடவும் ஆபத்தானது என்பதை அறியாமல்.


எப்படியோ,
தாயின் பாசம் என்னைக் கொஞ்சம் அடங்கச் செய்தது.

...............................................

ரியாக மூன்று வாரம் கழிந்து ஒரு மதிய நேரம்.


"எனக்கு கொழும்பில பேபபர்க் கம்பெனியில வேலை கிடைச்சிருக்கு. நாளன்னைக்கு வேலைக்கு வரச்சொல்லி தந்தி அனுப்பியிருக்காங்க...' என்ற என்னை, சாப்பிட்டுக் கொண்டிருந்த வாப்பாவும், பரிமாறிக் கொண்டிருந்த உம்மாவும் ஆச்சர்...யமாகப் பார்த்தார்கள்.


தந்தியைக் காட்டினேன்.

உம்மாவின் கண்களில் பளீர் என்று ஒளிப்பிரவாகம்.
வாப்பாவின் முகம் முழுக்கச் சந்தோசச் செழுமை.
என் மனதுக்குள் ஒரு போர் வீரனின் உற்சாகம்.

_வாப்பா சாப்பிடுவதை நிறுத்தி,தந்தியை வாங்கிப் பார்த்துவிட்டுச் சொன்னார்.

"ரொம்பத் திருப்தியா சந்தோசமா இருக்குடா... பயண் ஏற்பாடுகளைக் கவனி மகன்"_நா தழுதழுத்தது.


நான் அறையை நோக்கி நடக்க, வாப்பா உணர்ச்சி ததும்ப உம்மாவிடம் தொடர்ந்து சொல்வதையும் செவிமடுத்தேன்.


"செய்னம்பு... நமக்கு ஒரே புள்ள... அவனும் தூரமாகப் போறான்... கொழும்புக்கு. பிரிவு கஷ்டம்னாலும்... ஆம்புள்ப் புள்ளைக்கு தொழில் முக்கியம்ல. இரவைக்கு கோழிக்கறியாக்கி அவனுக்கு விருப்பமான இடியப்பம் அவிச்சுக்கொடு செய்னம்பு..."


நிச்சயம் செய்னம்பு என்கிற என் உம்மாவுக்கு கையும் ஓடாது...காலும் ஓடாது.சநதோசத்தில்...

....................................................

தியம் சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டுக்கொண்டிருந்தபோது உம்மா அரக்கப் பரக்க என்னை எழுப்பினாள். பகல் கனவு களைந்து நான் சுதாகரித்து எழ... உம்மாவின் முகம் முழுக்க ஒருவகைப் பீதி படிந்து, வியர்த்துக் கருத்திருந்தது. கட்டிலோரம் அமர்ந்து என் தலை தடவிக் கேட்டாள். சுருதியேயில்லாமல்....


"உனக்கு பேப்பர்க் கம்பனியில என்ன வேலை கிடைச்சிருக்கு மவன்?"
"ஜர்னலிஸ்ட்"
"அப்படீன்னா...?"
"பத்திரிகையாளன்'
"ஐய்யய்யோ..." உம்மா பதறினாள்.
"ஏன்மா?"


"ஐயய்யோ... உனக்கு இந்தப் பேப்பர்காரத் தொழிலும் வேணாம். ஆர்மித் தொழில் மாதிரி இதுவும் ஆட்கொல்லித் தொழிலாக இருக்கும்போல... இப்போ ரேடியோவில சொன்னாங்க... யாழ்ப்பாணத்தில் நடக்கிற யுத்தத்தில விமானம் வெடிச்சு ஆர்மிக்காரங்களோட சேர்த்துக் கொழும்பு பேப்பர்க்காரஙக மூன்று பேரும் கொல்லப்பட்டிருக்காங்களாம்... பேப்பர்காரங்கள இனந்தெரியாத யார் யாரோ கடத்திப் போற்தாகவும் ஸ்கூல் பிரின்சிபால் வேற வாப்பாக்கிட்ட சொல்லியிருக்கிறாரு. பயமாயிருக்குடா... பயங்கரமான தொழிலாக இருக்கும்போல... வேணாம்டா இந்தத் தொழில்... உயிர் கொல்லித் தொழில் வேணாம். உனக்கு வேறு ந்ல்ல தொழில் கிடைக்கும்... இந்தத் தொழில் வேணாம்டா மவன்... வேணாம் விட்டுடு..."


உம்மா சேலைத்தலைப்பை வாயில் புதைத்து அழத்துவங்க,

நான் எதுவுமே புரியாமல்...
_மயக்கத்துக்குப் போ...னே....ன்.


- நிறைவு -

- ரிஸ்கி ஷெரீப்,
இலங்கை
09-05-1995

Thursday, October 15, 2009

புதிதாயொரு பொருத்தம்


நிர்மலா டீச்சரால் நம்ப முடியவில்லை.
-டீச்சர் அப்படியே விக்கித்து உறைந்து போகின்றாள்.

இருபத்தியெட்டு வ்யதுக்குள் இருந்த - ஷோபாவை ஞாபகப்படுத்தும் செழுமையான மெழுகுபொம்மையுடல் வியர்வையில் நனைந்து....உடம்பில் இலேசாக நடுங்கினாள்.

மரணபயம் விசுக்கென்று நரம்பு நாளங்களில் ஊடுருவி...வாய்க்குள் எச்சில் விழுங்க மறுத்தாள்.

''வாசுகி டீச்சருக்கு ஏய்ட்ஸா?''
நிர்மலாவினால் ஜீரணிக்க முடியவில்லை.
பக்கத்தில் இருந்த.சக ஆசிரியைத் தோழி மாலதியிடம் கேட்கிறாள்.
"நீ சொல்றது உண்மையா மாலதி...?"


"நான் ஏன் பொய் சொல்றேன் நிர்மல்...திடீர்னு காய்ச்சலடிச்சு...அடங்காத நிலையில செக் பண்ணினப்பதான் சடென்லியா எச்.ஐ.வீ பாசிட்டீவ்னு கண்டுபிடிச்சிருக்காஙக.என்னாலேயும் நம்ப முடியல..."என்ற் மாலதியின் கண்களில் நீர் கசிய...


நிர்மலாவின் தலைக்குள் யாரோ சம்மட்டியால் அடித்தார்கள். முதுகு முள்ளந்தண்டில் பழுக்கக் காய்ச்சிய இரும்புப் பாளத்தை வைத்து உராய்ந்தார்கள்....அப்படியொரு வேதனை.


தன் வயதையொத்த தோழி...சக ஆசிரியை...நேற்றைவரைக்கும் நொறுக்குத்தீனியோ கொய்யாப்பழமோ எச்சில்படக்கடித்து பரிமாறித் தின்றவர்கள். கலகலப்புக்குச் சொந்தக்காரிகள். இன்று...ஒருத்திக்கு ஏய்ட்ஸ்...இது எப்படி சாத்தியம்?

மீண்டும் கேட்கிறாள் நிர்மலா.


"எப்படி மாலதியிது... சான்சேயில்லையே...தப்பாத் தொட்டுக்கிறத கனவிலேயும் நினைக்காத சுத்த சைவம்பா அவள். அப்படியிருக்க எப்படி?"

அவளால் பேச முடியவில்லை.தொண்டை அடைக்கிறது.


"வாசுகியோட புருஷன் சுவிட்சர்லாந்தில வேலைக்குப் போனப்போ சில சிவப்பான ஏரியாக்களில நுழைஞ்சிருக்கார்போல...அவர் திரும்பி வந்தும் கொஞ்சம் காலமாயிட்டுது. அவர் மூல்மா இவளுக்கு வந்திருக்கலாம்னு டாக்டர்ஸ் சொல்றாங்க நிர்மல்..."


நிர்மலாவினால் தாங்க முடியாமல் பக்கென்று அழுகை வெடிக்கிறது.அடக்க முயன்று தோற்றுப்போகிறாள்.விம்மி விம்மி அழுகிறாள்.கூடவே மாலதியும்.

.................... ---------------- ......................

சில மாதங்களுக்குப் பிறகு,

'சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்'
- வானொலியில் பீ. சுசீலா தேன்கசியப் பாடிக்கொண்டிருக்க...

அயர்ச்சியாய் வந்த நிர்மலா வானொலியின் வால்யூமைக் குறைத்துவிட்டு அப்படியே கட்டிலில் சரிந்தாள்.வியர்வை கசகசத்தபோதும் உடை மாற்ற வேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை.மனதுக்குள் ஒரு பூகம்பம் வெடித்துச் சிதறியிருந்தது.

வாசுகியின் ஈமக்கிரியைகளில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பிய பின்பும் நெஞ்சு முழுக்கப் பரவிய வலி இன்னமும் அப்படியே வியாபித்துத்தானிருந்தது.

வாசுகி இவ்வளவு சீக்கிரம் மரணித்துப் போவாள் என்று நிர்மலா
 எதிர்பார்த்தாளா என்ன?

ஏய்ட்ஸின் மரண அவஸ்த்தை இத்தனை கொடூரமா?

படிப்படியாக ஒன்று விட்டு ஒன்று...இரண்டு அவல மரணங்கள்.

எச்சில் பெண்களைத் தொட்டுவந்த குற்றத்திற்கான தண்டனைதான் வாசுகியின் கணவனுக்கு நேர்ந்த இந்த அவல மரணமென்றால்...சரி ஏதுமறியாத வாசுகி என்ன பாவம் செய்தாள் இறைவனே...

வாசுகியின் கணவன் மரணித்துச் சரியாக இரண்டாவது மாதம் வாசுகியும் மரணித்துப்போக...

ஒரே பாடசாலையின் சக ஆசிரியைகள் யதார்த்தமாகக் குழம்பித்தான் போனார்கள். அதிலேயும் நிரம்பவும் குழம்பினவள் நிர்மலாதான்.

 குழப்பம்,களைப்பு,சோர்வு மற்றும் மனதில் ரணங்களோடு...

நிர்மலாவைப் பெற்ற மரகதம் ஆவிபறக்கும் தேநீரோடு வருகிறாள்.

"நிர்மலா..."
"ஏன்மா?"
"டீ சாப்பிடும்மா..."
"பசிக்கலம்மா..."

மரகதம் தேநீர்க் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு, கட்டிலில் மகளின் அருகே வந்தமர்கிறாள்.
" நிர்மலா... மவள்..."
நிர்மலா சுருதியேயில்லாமல் பார்க்கிறாள்.


" உனக்குப் பார்த்த வரன் சரிவரும் போல இருக்கு. நல்ல இடம்கிறாங்க.. ரொக்கம், சீதனம் எதுவும் மாப்பிள்ளை வீட்டார் எதிர்பார்க்கலயாம்.. மாப்பிள்ளை எஞ்சினியருக்குப் படிச்சிருக்காரு... தவிர லண்டன்ல இருந்து வந்து ரெண்டு மாசமாம்... கல்யாணத்தை அவசரமாக முடிக்கணும்னு அப்பா சொல்றாரு. அதான் ஜாதகம் பார்த்திடலாம்னு போயிருக்காரு... நீ என்ன சொல்றே மவள்..."

நிர்மலாவுக்கு விக்கென்றது.
- மவுனமாயிருந்து பின் சொன்னாள்.


" ஜாதகம் பார்க்கிறதெல்லாம் முக்கியமில்லம்மா. ஆனால் அதற்கு முன்னால புதிசாயொரு பொருத்தம் பார்க்கணும்மா. ரெண்டு பேரோடையும் வாழ்க்கைய ஜாதகப் பொருத்தம்தான் நிர்ணயிக்கிறது என்கிறது அந்தக் காலம்மா. ஆனால் இப்போ எல்லாம் மாறிடுச்சு. முதல்ல... மாப்பிள்ளையோட ரத்தம் செக் பண்ணி மெடிக்கல் ரிப்போர்ட் கொண்டுவரச் சொல்லுங்க... அப்புறம்தான் ஜாதகமெல்லாம்."


மரகதம் புரியாமல் பார்க்கிறாள்.
"என்ன மவள் சொல்றே?"


" மாப்பிள்ளைக்கு ஏய்ட்ஸ் இருக்கா இல்லையான்னு பார்க்கணும். ஏன்னா இது கலியுகம் மாதிரி...வேற வழியில்லம்மா."

- மரகதத்துக்குப் புரிய ஆரம்பிக்கிறது.

- நிறைவு -

- ரிஸ்கி ஷெரீப்,
இலங்கை
03-06-1995